0
நான் பத்தாவது படிக்கும்பொழுது தமிழ் பாடத்தில் எங்கள் ஊர் பத்துன கதை தமிழ் பாடத்தில் வந்தது. என்ன தான் வீட்டில் இருப்பவர்கள் நம்ம ஊர் பெருமையை  சொன்னாலும் படிக்கும் பாடப்புத்தகத்தை பார்த்ததும் ஒரு பரவசம் வரும அட இது நம்மூர் கதை. பக்கத்தில் இருக்கும் நண்பர்களுக்கு நான் பெருமையாக சொல்லுவேன். திருப்புக்கொளியூர் எங்க ஊர் தான் அங்க ஒரு பெரிய சிவன் கோவில் இருக்குனு தொடங்கி என் தாத்தா எனக்கு சொன்ன கதை எல்லாம் சொல்லுவேன்.


விவசாய பூமிகள் அதிகம் இருந்த ஊர், இருபது வருடத்துக்கு முன் எங்கள் ஊர்ல கரும்பு, பருத்தி, ராகி, வாழை, என பணப்பயிர்களும் கிழங்கு வகைகளும் பயிரிட்டோம் ஆனால் இன்றோ புல் கூட வளர நீர் இல்லை.

 

இருபது வடுடங்களுக்கு முன் இந்த தாமரைக்குளம் முழு கொள்ளளவு நீரை எட்டியது. பின் இந்தவருடம் 2017ல் தான் முக்கால் அழவைகூட எட்டவில்லை அதற்குள் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் வந்துவிட்டது. சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்கள் குளத்தை உடைக்க வேண்டும் என்று ஒரு கூட்டம்,1834ல் சர் ஆர்தர் காட்டன் இருந்து எங்களுக்கு அத்திக்கடவு தண்ணீர் வரும் வரும் என எதிர்பார்தே ஏமாந்தவர்கள் பல வருடம் கழித்து இபோதுதான் இங்கு தண்ணீர் வந்துள்ளது அதை வீணாக்க மாட்டோம் என்ற ஒரு கூட்டம். குளம் வறட்சி காலத்தில்  அங்கு மது அருந்தும் கூடம் மற்றும் சில சொல்லமுடியாத செயல்களும் நடந்தேறுகிறது.          

முதலை வாயில் புகுந்த பிள்ளை மீண்டது எப்படி?  

திருப்புக்கொளியூரவிநாசியில் அந்தணர்கள் வாழும் அக்கிரகாரத்தில் கங்காதரன் என்னும் ஒரு அந்தணன் பிள்ளைப்பேறு இல்லாமல் வருத்தி அவிநாசிக் கொழுந்தின் வலப்பால் எழுந்தருளிய ஸ்ரீ கருணாலயச் செல்வியை வழிபட்டு ஆறு வருட காலம் தவம் இருந்தார். அம்மையின் திருவருளால் கங்காதர ஐயரின் மனைவி வயிற்றில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.அக்குழந்தைக்குப் பெற்றோர்கள் அவநாசிலிங்கம் என்ற பெயரிட்டு அன்னப் பிராசனம், சௌளம் முதலியன செய்தனர். நான்கு வயது கடந்து ஐந்தாவது வயது ஆரம்பித்தது . ஒரு நாள் காலையில் எதிர்வீட்டு அந்தணச் சிறுவன் ஒருவன் வந்து அவிநாசிலிங்கத்தை விளையாட அழைக்க, இருவரும் விளையாடிக் கொண்டு தாமரைக் குளத்திற்குக் குளிக்கச் சென்று நீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். அச்சமயம் அக்குளத்தில் வசித்துக் கொண்டிருந்த ஒரு முதலை விரைந்து வந்து அவிநாசிலிங்கம் என்ற அந்தணச் சிறுவனைப் பிடித்து விழுங்கிச் சென்றது.

உடன் விளையாடிய அந்தணச் சிறுவன் பயந்து கரையேறி வீட்டிற்கு ஒடி வந்து பிள்ளையைக் காணாது வருந்தும் பெற்றோர்கட்கு குளத்தில் நிகழ்ந்ததை அறிவித்தான். பிள்ளையை இழந்த பெற்றோர்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. அழுது அரற்றினார்கள். குளக்கரைக்கு ஓடி வந்து பார்த்தனர். முதலை பிள்ளையை விழுங்கியிருந்தது. மூன்று ஆண்டுகள் கழிந்தன. கங்காதர ஐயரின் மகனுடன் தாமரைக்குளம் சென்ற பையனுக்கு ஏழு வயது ஆயிற்று. அவனது பெற்றோர்கள் அவனுக்குப் பூணூல் அணியும் விழா கொண்டாடுகிறார்கள். அதனைக் கண்ட இறந்த சிறுவனின் பெற்றோர் மிக வருந்திப் புலம்பிக் கொண்டிருக்கிறாள்.

அச்சமயம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்புக்கொளியூரை அடைந்து அந்தணர்கள் வாழும் வீதி வழியாகச் செல்லும்போது, ஒன்றுக்கொன்று எதிராய் அமைந்த இரண்டு வீடுகளில் ஒரு வீட்டில் மங்கல ஒலியையும் மற்றொன்றில் அழுகை ஒலியும் கேட்டார்.
அங்குள்ள வேதியர்களை நோக்கி, “ஒரே வீதியில் இந்த இரண்டு ஒலியும் நிகழுதற்கு என்ன காரணம்?” என்று வினவினார்.
அப்போது அவர்கள் சுந்தரரை வணங்கி, “மூன்று ஆண்டுகளுக்கு முன்னே இந்த இரண்டு வீட்டுப் புதல்வர்கள் இருவரும் இங்குள்ள தாமரைக் குளத்தில் சென்று குளிக்கும் போது ஒருவனை முதலை பிடித்து விழுங்கியது. பிழைத்தவன் வீட்டில் உபநயனம் நடைபெறும் ஒலி இது. எதிர் வீட்டிலோ இறந்த புதல்வனின் பெற்றோர்கள் கதறும் ஒலி அது’ என்று கூறினர்.

அத்தன்மையினைக் கேட்டுத் திருவுளம் இரங்கி நின்ற சுந்தரரை, மகனை இழந்து வருந்திக் கொண்டிருக்கும் தாயும் தந்தையும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வந்த செய்தியைக் கேட்டு ஒடி வந்து முகமலர்ச்சியுடனே அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்கள்.

சுந்தரர் அவர்களை நோக்கி, ‘இன்ப மகனை இழந்தவர்கள் நீங்களா?’ என்று வினவினார். அவர்கள் மீண்டும் அவரை வணங்கி, ‘ஆம். அது முன்னே நேர்ந்து கழிந்தது; அது நிற்க, அடியேங்கள் நீண்ட காலமாகத் தங்கள் புகழைக் கேட்டுத் தங்களைத் தரிசிக்க விரும்பி இருந்தோம்; இறைவன் திருவருளால் தேவரீர் இங்கு எழுந்தருளும் பேறுபெற்றோம்’ என்று கூறினார்கள். அவர்களுடைய அன்பில் பிணிப்புண்ட சுந்தரர், மகனை இழந்த துன்பத்தையும் மறந்து நாம் வந்ததற்கு இவர்கள், மனம் மகிழ்கின்றார்கள்; ஆதலால், இவர்கள் புதல்வனை அம்முதலை வாயினின்று அழைத்துக் கொடுத்த பின்னரே அவிநாசியப்பர் திருவடிகளைச் சென்று பணிவேன் என்று கூறி முதலைவாய்ப் பிள்ளையை விழுங்கிய குளம் எங்கே உள்ளது? என்று கேட்டு அறிந்து குளக்கரையை அடைந்தார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தாமரைக் குளக் கரையில் நின்று கொண்டு, மனத்தை சிவபெருமானிடம் நிறுத்தி தம் திருக்கரத்தில் தாளம் ஏந்தி, முதலை முன்னே விழுங்கிய சிறுவனை மீளக் கொண்டு வரும் பொருட்டுத் தம் திருவாயால் ‘எற்றான் மறக்கேன்’ என்று தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தைப் பாட ஆரம்பித்தார்;
அதில் ,
உரைப்பார் உரையுகந்து உள்கவல் லார்தங்கள் உச்சியாய்!
அரைக்கா டரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்!
புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே!
காரைக்கான் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே

என வரும் நான்காவது திருப்பாட்டு முடியுமுன்னே வறண்டு கிடந்த தாமரைக் குளத்திலே மழை பெய்து நீர் மிகவும் நிரம்பித் தாமரைகள் மலர, முதலையானது கரையை நெருங்கிவர, உருத்திரன் தாதுவை உண்டு பண்ண, பிரம்மன் உருவத்தை உண்டாக்க, யமன் உயிரைக் கொடுக்க, திருமால் உடலை வளரும்படி செய்ய, முதலை புதல்வனைக் கரையில் மூன்று ஆண்டுகளின் வளர்ச்சியும் உடையதாக உமிழ்ந்து உடனே மறைந்தது. அதனைக் கண்ட தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். மக்கள் அதுகண்டு அதிசயித்தனர்.

அப்பொழுது அன்புகொண்டு மனம் உருகிய தாய் ஓடிச்சென்று அப்புதல்வனை வாரியெடுத்துக்கொண்டு வந்து தன் கணவனுடன் சுந்தரர் திருவடியில் வீழ்ந்து வணங்கினாள். சுந்தரர் அப்புதல்வனையும் அழைத்துக் கொண்டு ஆலயம் சென்று அவிநாசியப்பரையும் கருணாலயச் செல்வியையும் வணங்கித் திருப்பதிகம் பாடி முடித்து வெளியே வந்து, முதலையுண்டு வெளிவந்த புதல்வனுக்கு மங்கல முரசு ஒலிக்க தாமே முன்னின்று உபநயனம் நடத்திவைத்தார். அவிநாசியில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில் ‘முதலைவாய்ப் பிள்ளை உற்சவம்’ நடைபெறுகிறது.

காசியில் காவாசி அவினாசி?

தென்னாட்டுக் காசி என்றழைக்கப்படுகிறது அவினாசி லிங்கேஸ்வரர் ஆலயம். கண்ணைக் கவரும் சிற்பங்கள் நிறைந்த இத்திருக்கோயில் முற்காலத்தில் பெரிய கோயில்கள் என்று அழைக்கப்பட்டது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் கோவை மாவட்டத்தின் மற்றக் கோயில்களைவிடப் பெரியது.

சீகாழித் தலத்திலே சுத்த சைவ மரபில் வந்த சிவபாதஇருதயர்க்கு முருகப்பெருமானின் அவதாரமாக ‘திருஞானசம்பந்தவள்ளலார்’ தோன்றினார். அவரிடம் உபதேசம் பெற்று சீகாழியில் ‘திருஞானசம்பந்தவள்ளலார்’ மடாலயம் ‘திருநேரி தேசிகர்’ என்பவர் திருஞானசம்பந்தபெருமானாலேயே தோற்றுவிக்கப்பட்டது. அம்மடத்தின் பிற்காலத்தில் (1500 A.D.) தோன்றிய சட்டநாதபண்டாரவள்ளல் சந்நிதி கொங்கு ராச்சியத்தில் தலையூரில் மடாதிபதியாக சிஷ்யார்ச்சனையும், தேவாரம் திருவாசகம் வெளங்கும்படியும் செய்து இருந்து வந்தார். அம்மடத்தில் தோன்றிய  வெள்ளைத் தம்பிரான் (வள்ளல் தம்பிரான்) இளமையிலேயே சைவ சித்தாந்த சாத்திரத்திலும் வல்லவரானார். வள்ளல் தம்பிரான் சுவாமிகள் காசி யாத்திரை செய்யக்கருதி, தமது செல்வத்தில் ஒரு பகுதியை (பொற்காசுகளை) ஒரு கைத்தடியில் துளையிட்டு அடைத்து கைத்தண்டமாகக் கைக்கொண்டு  காசித்தலத்தை அடைந்தார்.

ஒருநாள் வள்ளல் தம்பிரான் சுவாமிகள் கங்கைக்கரையின் அருகில் ஒரு படிக்கட்டில் பூசைப் பெட்டகத்தையும் கைத்தடியையும் வைத்துவிட்டுக்கங்கை  நதியில் இறங்கிஸ்நானம் செய்து எழுந்தார். கங்கை நீரின் அலைமோதுதலால் கைத்தண்டம் கங்கையில் மூழ்கியது. பின்பு அது அவினாசிக்கங்கையில் வந்து சேர்ந்தது. அவினாசி கோயில் சிவாச்சாரியார்கள் கங்கைக் கிணற்றில் அத்தண்டம் கிடப்பதைக் கண்டு எடுத்து, ஸ்ரீ கருணாம்பிகை கருவறை சுவரில் சாற்றி வைத்தார்கள். காசிக்கங்கைக்கரையில் கைத்தண்டத்தை இழந்த வள்ளல் தம்பிரான் ஞானதிருஷ்டியில் தமது கைத்தண்டம் அவினாசிஸ்தலத்தில்  கருணாம்பிகை கர்ப்பகிரக சுவரில் சாற்றப்படிருப்பதை உணர்ந்தார். உடனே, தமது ஆன்மார்த்த பூஜையை முடித்து விஸ்வநாதரையும் தரிசித்து குளிகை இட்டு ஆகாயமார்க்கமாக அவினாசி வந்து சேர்ந்தார்.  கருணாம்பிகையின் அருளால் தனது கைத்தண்டத்தை சிவாச்சாரியார்களிடமிருந்து பெற்றார்.  பின்பு தனது காசுகளை செலவிட்டு அவினாசி கோயிலில் பைரவரை அமைத்தார்.

கருத்துரையிடுக

 
Top